7ம் வகுப்பு படிக்கும்போதே எனது தந்தை பென்ஸ் கார் வாங்கி தந்தார்- கே.சி.வீரமணி பேட்டி
1 min read
My father bought a Benz car when he was in 7th class – KC Veeramani interview
20.9.2021
7ம் வகுப்பு படிக்கும்போதே எனது தந்தை பென்ஸ் கார் வாங்கி தந்தார் என்று கே.சி.வீரமணி கூறினார்.
லஞ்சஒழிப்பு சோதனை
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் வீடு உள்பட 35 இடங்களில் கடந்த 16-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூ.34,01,060 ரொக்க பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அன்னிய செலவாணி டாலர், ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குள், பென்டிரைவ், செல்போன்கள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் (623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் வீட்டின் வளாகத்தில் 551 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக கே.சி.வீரமணி திருப்பத்தூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
7-ம் வகுப்பு படிக்கும்போதே…
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையின்போது எனது வீட்டில் 300 சவரன் நகை 2674, கிராம் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. எனது வீட்டில் கட்டிடம் கட்டுவதற்காக மணல் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக அரசிடம் பணம் கட்டி வாங்கிய சலான் உள்ளது.
வீட்டில் உள்ள ரோல்ஸ்ராய்ஸ் கார் பழமையானது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் தான்.
அமெரிக்க டாலர் ரூ. 1 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ளது மட்டுமே கைப்பற்றப்பட்டது. எனக்கு ரூ.40 கோடி கடன் உள்ளது. நான் பல ஆண்டாக வருமான வரி கட்டி வருகிறேன்.
கார் சிறுவயதில் இருந்தே வாங்கி வருவது எனக்கு பழக்கம். நான் 7-ம் வகுப்பு படிக்கும் போதே எனது தந்தை பென்ஸ்கார் வாங்கி தந்தார். நான் எதையும் மறைக்கவில்லை. ஆடம்பரத்தை விரும்பாதவன் நான்.
சமூக வலைதளத்தில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.