ரோஜா பூக்களை சாலையோரம் கொட்டி அழித்த விவசாயி
1 min read
The farmer who destroyed the roses by pouring them on the roadside
25.9.2021
கர்நாடகாவில் விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்த ரோஜா பூக்களை சாலையோரம் கொட்டி விவசாயி அழித்தார்.
ரோஜா விலை வீழ்ச்சி
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ரோஜா, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களை வளர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சிக்பள்ளாப்பூர் மார்க்கெட்டில் ரோஜா மற்றும் செண்டு மல்லி பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு கிலோ ரோஜா பூக்கள் ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செடியில் இருந்த பறித்த பூக்களை என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். பலர், தங்கள் தோட்டங்களில் பறித்த ரோஜா பூக்களை தள்ளுவண்டியில் வைத்து தெரு, தெருவாக விற்பனை செய்து வருகிறார்கள்.
சாலையோரம் கொட்டினார்கள்
இந்த நிலையில் ரோஜா பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பாதிக்கப்பட்டு வேதனை அடைந்த விவசாயி ஒருவர், ரோஜா பூக்களை டிராக்டரில் ஏற்றி சென்று புறநகர் பகுதியில் சாலையோரம் கொட்டி அவற்றை அழித்தார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஜா பூக்கள் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.