தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக சுப்ரியா சாகு நியமனம்
1 min read
Supriya Sagu appointed Tamil Nadu Pollution Control Board Chairperson
26.9.2021
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
மாசு கட்டுப்பாடு வாரியம்
தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக சென்னை கிண்டி, மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், சென்னை வேளச்சேரி, புதிய தலைமைச் செயலக காலனி, 2-வது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சேலம் அம்மம்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் என, ஐந்து இடங்களில் 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தரன மர பொருட்களை கைப்பற்றி உள்ளனர். இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கடாச்சலம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ளார்.
சுப்ரியா சாகு
இந்த நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சுப்ரியா சாகுவுக்கு தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.