செல்ல நாய் இறந்ததற்கு 11வது நாளில் துக்கம் அனுசரிப்பு; 500 பேருக்கு அன்னதானம்
1 min read
Mourning adjustment on 11th day for pet dog death; Donation to 500 people
27/9/2021
செல்ல நாய் இறந்ததற்கு 11-வது நாளில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி துக்கம் அனுஷ்டித்தனர்.
செல்ல நாய்
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டம் பத்ரக் பகுதியில் அதிகமாக துரித உணவு கடை நடத்தி வருபவர் சுஷாந்த் பிஸ்வால். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பகுதிக்கு ஒரு பெண் நாய்க்குட்டி வந்தது. கடை உரிமையாளர் பிஸ்வால் அந்த நாய்க்குட்டிக்கு சம்பி என்று பெயர் வைத்தார்.
அந்த நாய்க்கு தனியாக ஒரு தட்டு வைத்து தினமும் பிரியாணி, பிஸ்கட், ரொட்டி உள்ளிட்ட உணவுகளை கொடுத்து அன்பாக கவனித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள மற்ற கடைக்காரர்களும் சம்பிக்கு தினந்தோறும் உணவு கொடுத்து வந்தனர்.
உயிரிழந்தது
இந்நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி சம்பி திடீரென உயிரிழந்தது. 13 ஆண்டுகளாக தங்களுடன் இருந்த சம்பி பிரிந்ததில் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். சம்பி இறந்த 11வது நாளில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
அப்பகுதியினர் அன்னதான நிகழ்வின்போது சம்பிக்கு பேனர் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.இதுகுறித்த புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகி அது வைரலாகி உள்ளது.
இது குறித்து சுஷாந்த் பிஸ்வால் நான் சம்பியை எனது குழந்தைபோல் பார்த்து கொண்டேன் . அது மற்ற நாய்களுடன் கலந்ததில்லை, பெரும்பாலான நேரங்களில் என் கடையை சுற்றி திரியும். இரவில், அது என் கடைக்குள் தூங்கியது. சம்பி எனது குடும்பத்தின் ஒரு உறுப்பினரை போன்றது என கூறினார்.