நகராட்சி தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min read
Municipal elections must be held and completed within 4 months; Supreme Court order
27/9/2021
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கூறி செப்டம்பர் 15ம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலையும், டிசம்பர் 31ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி நடைபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் ஆறு மாதகால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும். தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும், என மாநில தேர்தல் ஆணையம் கோரியது.
4 மாதங்கள்
இதற்கு நீதிபதி, ‛தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது,’ எனக் கூறி 4 மாதங்கள் வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.