நீலகிரியில் 4 பேரை கொன்ற புலி பிடிப்பட்டது
1 min read
The tiger was captured in the Nilgiris
15.10.2021
நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி மற்றும் கூடலூரில் 4 பேரை கொன்ற புலியை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டில் ஏற்றினர்.
4 பேரை கொன்ற புலி
நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை செப்., 25 ம் தேதி முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று, முதுமலை ஒம்பட்டா பகுதியில், புலியை தேடினர் , மாலை வரை புலி இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
இரவு 9:30 மணிக்கு தெப்பகாடு – மசினகுடி சாலையில் நடந்து, சென்ற புலிக்கு, கால்நடை மருத்துவ குழுவினார் மயக்க ஊசி செலுத்திய பின்னர் பிடிக்க முயன்றனர். ஆனால், மயக்கம் தெளிந்த நிலையில் புலி, அவர்களிடம் சிக்காமல் தப்பியது.
பிடிபட்டது
இந்நிலையில், இன்று பிற்பகலில் கூட்டுப்பாறை பகுதியில், தென்பட்ட அந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். தற்போது புதருக்குள் புலி உள்ளது. அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள வனத்துறையினர், தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புலி மயக்கமடைந்ததை தொடர்ந்து, அதனை பிடித்து கூண்டில் ஏற்றினர்.
அமைச்சர் பேட்டி
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
2014 முதல் இதுவரை ஆட்களை கொன்ற 4 புலிகள் வேறு வழியில்லாமல் சுட்டு பிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிடிபட்ட புலி, மாடுகள் மற்றும் 4 பேரை அடித்து கொன்றது. முதல்முறையாக ஆட்கொல்லி புலி உயிருடன் பிடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. ஊசி போட்டு பிடிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய இலக்கு. இந்த புலியை சிகிச்சை அளித்து வண்டலூர் கொண்டு செல்ல உள்ளோம். முதல்வர் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.