குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு
1 min read
Flooding in Courtallam Falls
17/10/2021
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குற்றால மலைப்பகுதியில் கன மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி முதல் பாலம் மீது வெள்ளம் சீறிப் பாய்ந்தது. இதனால் குற்றாலநாதர் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்பிரகாரம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ள நீர் சன்னதி பஜார் வழியே பாய்ந்தோடி குற்றாலம் அண்ணாசிலை அருகே சிற்றாற்றில் கலந்தது.
பழையக் குற்றாலம்
பழையக் குற்றால அருவியிலும் வெள்ளப் பெருக்கு அதிகமாக இருந்தது. அருவிக்கு செல்லும் வழி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது.
ஐந்தருவியில் 5 கிளைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 5 கிளைகளும் ஒரே கிளையாக மாறியது. புலியருவியிலும் வெள்ளப் பெருக்கு நீடித்தது.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் வேடிக்கை பார்த்துச் சென்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இன்றி அருவி பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.