9 ஆயிரம் மொபைல் போன்களுடன் வந்த டிரக்கர் கடத்தல்
1 min read
Trucker hijacked with 9 thousand mobile phones
17.10.2021
ஆயிரக்கணக்கான மொபைல்போன்களுடன் மத்தியபிரதேசத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற டிரக்கர் ஒன்று கடத்தப்பட்டது. சவாரி கேட்டு 2 பேர் ஏறி சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம் 2 மாநில போலீசாரை திணற வைத்துள்ளது.
டிரக்கர்
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக டிரக்கர் ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. பிரபல ஒப்போ என்ற மொபைல் போன் நிறுவனம் விற்பனைக்காக மொபைல்போன்களை பத்திரமாக பேக் செய்து அனுப்பி வைத்தது. இதனை மணீஷ் என்ற டிரைவர் ஓட்டி சென்றார். வேன் நள்ளிரவில் குவாலியர் பைபாஸ் ரோட்டில் வந்த போது 2 மர்ம நபர்கள் வண்டியை நிறுத்தி சவாரி கேட்டுள்ளனர்.
டிரைவரும் பரிதாப்பட்டு இருவரையும் ஏற்றினார். சில நிமிடங்களில் டிரைவருக்கு உதை கொடுத்து அவரை லாரியில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் இருவரும் லாரியை தாங்களே ஓட்டி பறந்தனர். டிரைவர் நடுரோட்டில் தவித்தார். இந்த சம்பவம் குறித்து ஒப்போ என்ற மொபைல்போன் நிறுவன மேலாளர் சச்சின் மானவ் மதுரா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
9 ஆயிரம் செல்போன்
நொய்டாவில் இருந்து புறப்பட்ட லாரியில் 9 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் இருந்ததாகவும், இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ. 7 கோடி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
போலீசார் விசாரணையில் எந்த லோடும் இல்லாமல் டிரக்கர் ஒன்று ஷியோபூர் மாவட்டத்தில் தனியே காட்டுக்குள் நிற்பது கண்டறியப்பட்டது. கொள்ளையர்கள் போன்களை மாற்று லாரியில் ஏற்றி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். சினிமா பாணியில் நடந்த சம்பவம் மத்தியபிரதேசம், உ. பி., மாநில போலீசாரை அதிர வைத்துள்ளது.