உத்தரகாண்டில் கனமழைக்கு 25 பேர் சாவு
1 min read
25 killed in heavy rains in Uttarakhand
19.10.2021
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு 25 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
கனமழை
உத்தரகாண்டில் கடந்த 18ந்தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
இதேபோன்று, கடந்த 17ந்தேதி முதல் 19ந்தேதி வரை (இன்று) ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி அந்த மாநிலத்தில் கனமழை பெய்தது. உத்தரகாண்டில் லேண்ஸ்டவுனே பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் நேற்று முன்தினம் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நடப்பு சூழல் பற்றி பாவ்ரி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் முதல்-மந்திரி புஷ்கார் சிங் தமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. உத்தரகாண்டில் பெய்து வரும் தொடர்மழைக்கு 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் நைனிடால் மாவட்டத்தில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
200 பேர் சிக்கியுள்ளனர்
இதுபற்றி டி.ஜி.பி. அசோக் கூறும்போது, ராம்நகர்-ராணிகேத் வழியில் அமைந்துள்ள லெமன் ட்ரீ ரிசார்ட்டில் 200 பேர் சிக்கி உள்ளனர். அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார். உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கார் சிங் தமி வான்வழியே சென்று கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு மேற்கொண்டார்.