அருணாசல பிரதேச எல்லையில் இந்திய ராணுவம் தரப்பில் பீரங்கிகள் குவிப்பு
1 min read
Indian Army artillery on the Arunachal Pradesh border
20.10.2021
அருணாசல பிரதேச எல்லையில் இந்திய ராணுவம் தரப்பில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு உள்ளது.
எல்லையில் பிரச்சினை
இந்தியா- சீனா இடையே கடந்த 17 மாதங்களாக கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்னை நீடிக்கிறது. அண்மையில் இரு தரப்பு ராணுவ மட்டத்தில் 13-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. படைகளை விலக்கிக் கொள்வது, பழைய நிலையே எல்லையில் தொடரச் செய்வது குறித்து பேசப்பட்டது.
ஆனால் இந்தியாவின் கோரிக்கையை சீனா ஏற்காததால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையே நீண்ட ஆண்டுகளாக அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இந்திய தலைவர்கள் அங்கு செல்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசத்திற்கு அரசுமுறைப் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்றிருந்தார். இடாநகரில் உள்ள சட்டப்பேரவையிலும் அவர் உரையாற்றினார். இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
பீரங்கி
சீனாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அந்நாட்டின் வெளியுறவுத் துறையின் கருத்தை நிராகரிப்பதாக கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியான தாவங் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளைக் குவித்துள்ளது. இதனால் இருதரப்பு எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது