திருமணமான மறுநாள் தோழியுடன் இளம்பெண் ஓட்டம்
1 min read
Teenage run with girlfriend the day after marriage
3.11.2021
திருமணமான மறுநாள் தோழியுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தது தெரிந்ததும் மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திருமணம்
கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், பழுவில் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது. மறுநாள் புதுமணத்தம்பதியினர் அருகில் உள்ள வங்கிக்கு சென்றனர். அப்போது இளம்பெண் போன் செய்துவிட்டு வருவதாக கூறி, கணவரின் செல்போனை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் வங்கிக்குள் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவன் வெளியே வந்து பார்த்தபோது இளம் பெண்ணை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் புதுமணப்பெண் மாயம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், இளம்பெண்ணுக்கு ஒரு தோழி இருப்பதும், 2 பேரும் உயிருக்கு உயிராக பழகி வந்ததும், சம்பவத்தன்று அந்த இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பிசென்றதும் தெரியவந்தது. அவர் செல்லும் போது வங்கியில் இருந்து எடுத்த ரூ.1 லட்சம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 16 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார்.
தோழியிடம் ஓட்டம்
திருமணமான மறுநாள் மனைவி தோழியுடன் ஓட்டம் பிடித்ததை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போன கணவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாயமான புதுப்பெண், அவரது தோழி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே புதுப்பெண்ணின் தோழியின் தந்தைக்கு மதுரையில் உள்ள ஒரு லாட்ஜில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய லாட்ஜ் நிர்வாகத்தினர், உங்கள் மகள் அடையாள அட்டையை காண்பித்து ஒரு அறை எடுத்து இருந்தார். அவருடன் மற்றொரு இளம் பெண்ணும் தங்கி இருந்தார். இருவரும் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அறைக்கான வாடகை கட்டணமும் செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தோழியின் தந்தை போலீசாருடன் மதுரைக்கு சென்று அந்த லாட்ஜில் காத்திருந்தார். இந்த நிலையில் புதுப்பெண்ணும், தோழியும் மீண்டும் அந்த லாட்ஜ்க்கு வந்தனர். புதுப்பெண் மற்றும் தோழி தனது தந்தையும், அவருடன் இருந்த போலீசாரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்து இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சேர்ந்து வாழ…
விசாரணையில், தோழிகள் 2 பேரும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர். 2 பேரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால் பணம் தேவைப்படும் என்பதால் திருமணம் வரை காத்திருந்துள்ளனர். திருமணம் முடிந்ததும் மறுநாள் கணவருடன் வங்கிக்கு சென்ற புதுப்பெண் தனது 16 பவுன் நகை மற்றும் வங்கியில் எடுத்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து புதுப்பெண்ணையும், அவரது தோழியையும் அழைத்து போலீசார் அறிவுரைகள் கூறினர். அதன்பின்னர் இருவரின் உறவினர்களையும் அழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
புதுப்பெண்ணுடன் சென்ற தோழியும் திருமணமாகி15 நாளில் கணவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.