கொடைக்கானல் மலையில் கார் கவிழ்ந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
1 min read
A car overturned on Kodaikanal hill, killing 3 members of the same family
6.11.2021
தீபாவளிக்கு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு ஊர் திரும்பிய போது பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் தேனூரை சேர்ந்தவர் கோகுல். வழக்கறிஞரான இவர் தீபாவளி விடுமுறையையொட்டி தனது மனைவி நந்தினி, குழந்தை தன்யா, மாமியார் அழகுராணி மற்றும் நண்பர் கார்திக்குடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இவர்கள் அனைவரும் சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு கொடைக்கானலில் இருந்து சொந்த ஊருக்கு கார் புறப்பட்டனர்.
கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலையில் உள்ள வலைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. கனமழை மற்றும் இரவு நேர மேகமூட்டத்தால் சாலை சரியாக தெரியாததால் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளன காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த விபத்தில் வழக்கறிஞர் கோகுலின் மனைவி நந்தினி, குழந்தை தன்யா மற்றும் மாமியார் அழகு ராணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோகுல் அவரது நண்பர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளிக்கு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.