June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

1 min read

MK Stalin visited flood affected areas in Chennai

7.11.2021
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

சென்னையில் மழை

சென்னையில் நேற்று முதல் விடாமல் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை இன்று காலையிலும் நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் நிரம்பி ரோட்டுக்கு மேலே வழிந்தோடியது. பாதாள சாக்கடையும் மழைநீருடன் கலந்து ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பல இடங்களில் கறுப்பு நிறத்துடன் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் இதை கடக்க பெரிதும் சிரமப்பட்டனர். வாகன போக்குவரத்தும் பல இடங்களில் ஸ்தம்பித்தது. தொடர்ந்து மழைபெய்த வண்ணம் இருந்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னை நகரமே இன்று காலை ஸ்தம்பித்தது.

மு.க.ஸ்டாலின்

இதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். முதலில் அவர் எழும்பூர் பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வடசென்னை பகுதிகளையும் பார்வையிட்டார்.

புரசைவாக்கம், டவுட்டன், கே.என்.கார்டன், பட்டாளம், நியூபேலஸ் ரோடு, ஓட்டேரி நல்லாங்கால்வாய், அயனாவரம் நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம், சத்யாநகர், கொளத்தூர் பாபா நகர், ஜி.கே.எம்.காலனி, ஜவகர் நகர், பெரம்பூர் பேப்பர் மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

மாநகராட்சி ஊழியர்கள் வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடந்து சென்றும் பார்வையிட்டார். நிவாரண முகாம்களையும் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

சுரங்கப்பாதை மூடல்

இன்று மதியம் சற்று நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

சென்னையில், எழும்பூர், கோடம்பாக்கம், மாம்பலம், அசோக்நகர், தி.நகர் வில்லிவாக்கம், நீலங்கரை, நங்கநல்லூர், வேளச்சேரி, புரசவைவாக்கம், கீழ்பாக்கம் கொளத்தூர், நந்தனம், சூளைமேடு, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மடிப்பாக்கம், பெரம்பூர், பகுதியிலும் மழை பெய்கிறது.

இதனிடையே, சென்னை தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இளைஞர்கள் நீரில் மீன்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அருகில் உள்ள குளத்திலிருந்து நீர் நிரம்பி சுரங்கப்பாதைக்கு வருவதால் வரிசையாக நின்று மீன் பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. ஈவிஆர் சாலை, சுங்குரெட்டி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. மேட்லி சுரங்க பாதை, கணேஷபுரம் சுரங்க பாதை மூடப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் சுரங்கபாதையில் இலகு ரக, இரு சக்கர வாகனங்கள் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.