June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் 30-ந்தேதி வரை நீட்டிப்பு

1 min read

Corona curfew restrictions in Tamil Nadu extended till 30th

14.11.2021

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தேவையான கட்டுப்பாடுகளை வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 28.10.2021 அன்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி (நவம்பர்) வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

*கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

முக கவசம்

*கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

*கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

*கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

*நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

*கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி

*தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தவறாது 2-வது தவணை தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

*நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

*நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மழைக்காலம்

மழைக்காலத்தில், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினைக் கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக் கொள்ள வேண்டும்.

நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டுமென்றும், இடி மற்றும் மின்னல் ஏற்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை கடை பிடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மழைக் காலங்களில் தண்ணீர் தொடர்பான தொற்று நோய்கள் எளிதில் பரவும் என்பதால் பொது மக்கள் காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும்.

பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.