மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் காதலனுடன் நுழைய முயன்ற பெண் கைது
1 min read
Woman arrested for trying to break into presidential palace with boyfriend
17.11.2021
மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஜனாதிபதி மாளிகை
தலைநகர் டெல்லியின் ராஜவீதி பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. இது இந்திய ஜனாதிபதியின் இல்லமாகவும், அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனால், ஜனாதிபதி மாளிகை எப்போழுதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள்ளேயே இருக்கும்.
இந்நிலையில், பாதுகாப்பு நிறைந்த ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 அளவில் அத்துமீறி நுழைய இருவர் முயற்சித்துள்ளனர்.
மது போதையில் இருந்த பெண் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரும் பாதுகாப்பை மீறி ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் இருவரையும் ஜனாதிபதி மாளிகை வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மது போதையில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பெண் மற்றும் அவரது காதலன் சலூன் கடையில் வேலைபார்ப்பது தெரியவந்தது. மேலும், மது போதையிலே இருவரும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.