சட்டசபையில் குடும்பத்தினரை அவமதிப்பு: சந்திரபாபு நாயுடு கண்ணீர்
1 min read
Insult to family in assembly: Chandrababu Naidu tears
19.11.2021
சட்டசபையில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கூறி, பத்திரிகையாளர் சந்திப்பில் கதறி அழுத ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘இனிமேல் முதல்வராக தான் சட்டசபைக்குள் நுழைவேன், அதுவரையில் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன்,’ என சபதமேற்றுள்ளார்.
சந்திரபாபு நாயுடு
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை சட்டசபையில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று நடந்த சட்டசபையில் உணர்ச்சிவசப்பட்ட சந்திரபாபு நாயுடு, ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
கடந்த இரண்டரை ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தியபோது அமைதியாக இருந்தேன். ஆனால், இன்று எனது மனைவி மற்றும் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் அளவிற்கு சென்றுள்ளனர்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் என்னை அத்துமீறி விமர்சிப்பதை ரசிக்கிறார். ஒரு மூத்த அரசியல்வாதி அவமானப்படுத்தப்படும்போது, அவர் பலமுறை சிரித்துக்கொண்டே இருக்கிறார். நான் என் வாழ்நாள் முழுவதையும் என் குடும்பத்தின் கவுரவத்திற்காகவே வாழ்ந்தேன். இந்த மாதிரியான சூழலை சட்டசபையில் இதுவரையில் பார்த்ததில்லை. இனிவரும் நாட்களில் சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கப்போவதில்லை. முதல்வராக வெற்றிப்பெற்ற பிறகு தான் இனிமேல் சட்டசபைக்கு வருவேன்.
இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.