ஆந்திராவுக்கு ஒரே தலைநகரம் அமராவதிதான்
1 min read
Amravati is the only capital city of Andhra Pradesh
22.11.2021
ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவை கடந்தாண்டு அறிமுகப்படுத்திய அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தற்போது அம்மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். அமராவதி மட்டுமே ஒரே தலைநகரமாக விளங்கும்.
மூன்று தலைநகரம்
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில், மூன்று தலைநகரங்களை ஏற்படுத்த, ஆந்திர அரசு திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் கருத்துகள் கேட்டு பெறப்பட்டன. அதன்படி, கர்னுால் நீதிமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் ஆட்சி தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
ஆந்திர அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மத்திய அரசும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பதில் அளித்த மத்திய அரசு, ‘ஒரு மாநிலத்திற்கு தலைநகரம் அமைக்கும் முடிவு என்பது முழுக்க முழுக்க அந்த மாநில அரசு தொடர்புடையது. எனவே இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது,’ எனக்கூறியது. ஆந்திர அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆந்திராவுக்கு ஒரே ஒரு தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டசபையில் வெளியிடுவார்,’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆந்திராவில் 3 தலைநகர்களை அமைக்கும் முடிவில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பின்வாங்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று சட்டசபையில் பேசிய ஜெகன்மோகன், ‘ஆந்திரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில், மூன்று தலைநகரங்களை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என கருதினோம். அரசாங்கம் முன்பு அறிமுகப்படுத்திய மசோதாவை திரும்பப் பெறுகிறோம். எந்த குறையும் இல்லாத பிழையில்லாத புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவோம்,’ எனக் கூறினார்.