June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பெரும்பாலான ஆணையங்களின் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்கு கொடுக்கப்படவில்லை; சுப்ரீம் கோர்ட்டு

1 min read

The decisions of most commissions are not made public; Supreme Court

23.11.2021
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கில், பெரும்பாலான ஆணையங்களின் முடிவுகள் எதுவுமே தெரியாமல் இருந்துள்ளதாகவும், பிறகு எதற்கு இத்தகைய ஆணையங்களை அமைக்கிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த போது உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய மாநில அரசு சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நியமித்தது.

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் ஐகோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அப்பீல்

இதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல்நசீர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு தலைபட்சம், தகுதியின்மை போன்ற காரணங்களுக்காக ஆறுமுகசாமி ஆணையத்தை எதிர்ப்பதாகவும், மருத்துவர்களை விசாரிக்கும் ஆணையத்தில் ஒரு மருத்துவ நிபுணர்கள் கூட இல்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்பல்லோ தரப்பில் முன்வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு வாதம்

தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடும்போது கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம். மருத்துவமனை தரப்பில் என்ன மருந்துகள் ஜெயலலிதாவிற்கு கொடுத்தது, என்ன சிகிச்சையை வழங்கியது போன்ற விவரங்கள் எல்லாம் வெளிப்படையாக தெரியவேண்டும். அதை தான் ஆணையம் செய்து வருகிறது. ஆறுமுகசாமி ஆணையம் ஓர் உண்மை கண்டறியும் ஆணையம். அதன் வேலை உண்மைத் தகவல்களை திரட்டி வழங்குவது மட்டும்தான். ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க எந்த மறுப்பும் இல்லை.
உச்ச நீதிமன்றம் விரும்பினால் அதனை செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் இருந்து நாங்கள்தான் அந்த மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்போம். அதில் அப்போலோ தலையிடக் கூடாது. ஆணையத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய தயாராக இருக்கிறோம். ஆணையத்தை விரிவாக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னால் அதனை செய்வதற்கும் தயாராக உள்ளோம்.

ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது என்பதை ஏற்க முடியாது. மனு மீது மனுவை தாக்கல் செய்து ஆணையத்தின் செயல்பாட்டை தடுக்கவே அப்பல்லோ முயற்சிக்கிறது. ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அரசின் முடிவு. அதில் கூட ஆணையம் தலையிட முடியாது.
இவ்வாறு தமிழக அரசு வாதிட்டது.

எதற்கு ஆணையங்கள்?

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், ‘பெரும்பாலான ஆணையங்களின் முடிவுகள் எதுவுமே தெரியாமல்தான் இருந்துள்ளது. அதன் முடிவுகள் எதுவும் பொதுமக்கள் பார்வைக்கு கொடுக்கப்படவில்லை. பிறகு எதற்கு இத்தகைய ஆணையங்களை அமைக்கிறீர்கள்?,’ எனக் கேள்வி எழுப்பியது.
மேலும் ஆறுமுகசாமி ஆணையம் என்ன மாதிரியான விசாரணை முறைகளை கடைபிடிக்கிறது என்பது தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.