2,300 அறைகள் கொண்ட விக்ராந்த் கப்பல் ஆகஸ்டு மாதம் கடற்படையில் சேர்ப்பு
1 min read
The 2,300-room Vikrant enlisted in the Navy in August
25.11.2021
நவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் கடற்படையில் இணையும் என கடற்படை தளபதி கரம்பிர் சிங் கூறியுள்ளார்.
ஐ.என்.எஸ்.
இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் நான்காவது ஸ்கார்பியன் வகை ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிகப்பல், கடற்படை தளபதி கரம்பீர் சிங் முன்னிலையில் கடற்படையில் இணைக்கப்பட்டது.இந்த கப்பல், பிரான்சுடன் இணைந்து மத்திய அரசுக்கு சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனமான மசகான் டாக் லிமிடெட் நிறுனம் கட்டமைத்துள்ளது.
இதன் பின்னர் கரம்பிர் சிங் கூறியதாவது:-
ஐஎன்எஸ் வேலா போர்க்கப்பல், முழு அளவில் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் பெற்றது. இன்றைய சூழ்நிலையில் நிலவும் மாறும் மற்றும் சிக்கலான பாதுகாப்பு சூழ்நிலையில், இந்த போர்க்கப்பலின் திறனானது, இந்தியாவின் கடலோர பாதுகாப்பை பாதுகாப்பதில், கடற்படையின் திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
விக்ராந்த்
விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம், சமீபத்தில் வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டது. 2022 ஆகஸ்டு மாதத்திற்குள் இந்த போர்க்கப்பலை கடற்படையில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
2,300 அறைகள்
நவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், 262 மீ நீளமும், 62 மீ., அகலமும், 59 மீ. உயரமும் கொண்டது. அதில் 14 அடுக்குகளும் 2,300 அறைகளும் உள்ளன. 1700 பேர் பணிபுரியும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகளும் பணிபுரியும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் போர்க்கப்பல் முதல்முறையாக இந்த ஆண்டு(2021) ஆகஸ்ட்டிலும், இரண்டாவது முறையாக அக்டோபரிலும் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
கடற்படை தளபதி கரம்பிர் சிங் மேலும் கூறும்போது, “சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நாம் விழிப்புடன் இருக்க வேண்டி உள்ளது.” என்றார்.
சமீபத்தில், அணுசக்தி தொழில்நுட்பம் பரிமாற்றம், யுரேனியம் சப்ளை, அணுக்கரு எரிபொருள் சப்ளை உள்ளிட்டவை தொடர்பாக சீனா, பாகிஸ்தான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.