எலிக்காக விஷம் கலந்து வைத்த இனிப்பை சாப்பிட்ட புதுப்பெண் சாவு
1 min read
Death of a young woman who ate sweets mixed with poison for rats
26.11.2021
மதுராந்தகம் அருகே எலிக்காக விஷம் கலந்து வைத்த இனிப்பை சாப்பிட்ட புதுப்பெண் பரிதாபமாக இறந்தார்.
புதுப்பெண்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சாத்தனூரை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஏழுமலை (வயது 27). இவருக்கும் அவரது நெருங்கிய உறவினரான அவிரிமேடு பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் திரிஷா (19) என்பவருக்கும் கடந்த 10-ந்தேதி மதுராந்தகத்தில் திருமணம் நடந்தது.
கடந்த 21-ந்தேதி திரிஷா தன்னுடைய தாய் வீடான அவிரிமேட்டுக்கு கணவருடன் விருந்துக்கு சென்றார்.
மாலை இருவரும் சாத்தனூருக்கு வந்து விட்டனர். அதன் பிறகு திரிஷா தொண்டைவலி இருப்பதாக கூறியதால் அவரை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய திரிஷா நேற்று முன்தினம் மயங்கி விழுந்தார். அவரை மீண்டும் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
*******************
விசாரணையில் தாய் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற திரிஷா, அங்கு எலிக்காக விஷம் கலந்து வைத்த இனிப்பை தெரியாமல் சாப்பிட்டது தெரியவந்தது. திரிஷாவுக்கு திருமணமாகி 14 நாட்களே ஆவதால் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. சரஸ்வதி, துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.*