June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மழை பாதிப்பு மு.க.ஸ்டாலின் ஆய்வு

1 min read

MK Stalin’s study of rain damage

26.11.2021

தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மழை

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அடுத்த 2 தினங்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, மீனம்பாக்கம், பரங்கிமலை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி ராயபுரம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் , கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், வேளச்சேரி, குரோம்பேட்டை, அசோக்நகர், சூளைமேடு, வண்டலுர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 7 ஆம் தேதி ஒரே நாளில் சென்னையில் 23 செ.மீ மழை பெய்த நிலையால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகள் அதிக பாதிப்புகளை சந்தித்தது.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

இந்நிலையில் பருவ மழையை எதிர்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், திரு.வி.க.நகர், எழும்பூர், சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட க்ரே நகர், அசோகா அவன்யூ, ஜி.கே.எம், காலனி, 70 அடி சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணியை பார்வையிட்டார்.

தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதிக அளவில் மூன்று இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், 70 இடங்களில் கனமழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *