29-ந் தேதி நடைபெறுவதாக இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு; விவசாய சங்கங்கள் அறிவிப்பு
1 min read
Postponement of tractor rally scheduled for 29th; Notice of Agricultural Associations
27/11/2021
நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
டிராக்டர் பேரணி
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை வரவேற்ற விவசாயிகள் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.
விவசாய சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ம் தேதி (நாளை மறுநாள்) பாராளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், நாளை மறுநாள் (29-ஆம் தேதி) நடத்துவதாக இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கோரிக்கை
அதேசமயம் எதிர்கால நடவடிக்கை குறித்து அடுத்த மாதம் கூட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
விவசாய சட்டம் வாபஸ் பெறப்பட்டாலும் விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்டத்திற்கான கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா செய்தித்தொடர்பாளர் தர்ஷன் பால் கூறியதாவது:
திங்கள்கிழமை(நாளை மறுநாள்) நாடாளுமன்ற நோக்கி அணிதிரளும் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவிடம் கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
லக்கிம்பூர் கெரி வன்முறை மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மிஸ்ரா இடைநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களையும் அரசின் முன்பு வைத்துள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம். டிசம்பர் 4 ஆம் தேதி மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.