ஆந்திராவில் செம்மரம் கடத்தல்; வனத்துறை விரட்டிய போது லாரியில் இருந்து குதித்த தமிழக வாலிபர் பலி
1 min read
Sheep smuggling in Andhra; A Tamil Nadu youth was killed when he jumped from a lorry while being chased by the forest department
27/11/2021
செம்மரம் கடத்தலில் ஈடுபட்டவரை ஆந்திர வனத்துறை விரட்டிய போது லாரியில் இருந்து குதித்து இறந்தார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
செம்மர கடத்தல்
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இருந்து பொதட்டூர் வழியாக லாரியில் செம்மரம் கடத்தி செல்வதாக பொதட்டூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் செம்மரம் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடிக்க முயன்றனர். லாரி நிற்காமல் வேகமாக சென்றது.
அப்போது லாரியில் தமிழகத்தை சேர்ந்த 45 தொழிலாளர்கள் இருந்தனர். வனத்துறையினர் லாரியை மடக்குவதை கண்ட தொழிலாளர்கள் ஓடும் லாரியில் இருந்து ஒவ்வொருவராக கீழே குதித்தனர்.
சாவு
கீழே குதித்த தொழிலாளர்களில் ஒருவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர். லாரியில் இருந்த மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
லாரியை பின்தொடர்ந்து வந்த வனத்துறையினர் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு கடப்பா ரிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபரின் உடல் ரிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பலியான வாலிபர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் விவரங்களை ஆந்திர வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர். லாரியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய தொழிலாளர்களை கடப்பா வனத்துறையினர் தேடிவந்தனர். இதில் 4 பேரை கைது செய்தனர்.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. தமிழக தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்து வந்தது யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.