தனியார் பஸ் மீது 108 ஆம்புலன்ஸ் மோதி 2 பேர் சாவு
1 min read
108 ambulance collides with private bus, 2 killed
1.12.20.21
வேடசந்தூர் அருகே பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது பின்னால் வந்த 108 ஆம்புலன்சு மோதி நொறுங்கியது. 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
கரூரில் இருந்து திண்டுக்கலுக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை சின்னாளபட்டி நடுப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்குமார்(வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். பஸ், மாலை வேடசந்தூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டியை அடுத்துள்ள ஒரு தனியார் நூட்பாலை முன்பு திடீர் என்று பிரேக் போட்டு நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.
அப்போது ஏற்கனவே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின்பகுதியில் பயங்கரமாக மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏற்கனவே விபத்தில் காயம் அடைந்து 108 ஆம்புலன்சில் கொண்டு வந்த பழனிச்சாமி, வீரக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
108 ஆம்புலன்சு டிரைவர் சங்கர், மருத்துவ உதவியாளர் சத்யா மற்றும் உடன் வந்த சுமதி ஆகியோர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.