இந்தியாவில் பிரமோஸ் தயாரிப்பு ஏன்?- ராஜ்நாத் சிங் விளக்கம்
1 min read
Why is Pramos made in India? – Rajnath Singh Explanation
26.12.2021
மற்ற நாடுகளை தாக்குவதற்காக பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கவில்லை. மாறாக, மற்ற எந்த நாடுகளும் இந்தியாவை தவறான எண்ணத்துடன் பார்க்காமல் இருப்பதற்காகவே தயாரிக்கப்படுகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரமோஸ் ஏவுகணை
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
பிரமோஸ் ஏவுகணை, மற்ற ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களை மற்ற நாடுகளை தாக்குவதற்காக இந்தியா தயாரிக்கவில்லை. மற்ற நாடுகளை தாக்குவதையோ அல்லது எந்த நாட்டின் நிலத்தை ஆக்கிரமிக்கும் எண்ணமோ இந்தியாவிற்கு கிடையாது. இந்தியாவை, மற்ற நாடுகள் தவறான எண்ணத்துடன் பார்க்கும் துணிச்சல் வரக்கூடாது என்பதற்காக தான் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரிக்கிறது. உலகில் எந்த நாடும் நம்மை தாக்க முடியாதபடி இந்தியாவிற்கு அணு ஆயுதங்கள் பாதுகாப்பு உள்ளது என்பதை நாங்கள் காட்டி உள்ளோம்.
இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற, நமது அண்டை நாடு ஒன்று நம் மீது தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. உரி மற்றும் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது. இதனால், பிரதமர் எடுத்த முடிவின்படி, நாம் அந்த நாட்டிற்கு சென்று பயங்கரவாத புகலிடங்களை அழித்தோம். விமானப்படை தாக்குதல் தேவைப்பட்ட இடத்தில் அதனையும் வெற்றிகரமாக செய்தோம். இதன் மூலம் இந்தியாவை யாரும் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தால், எல்லைக்குள் மட்டுமல்லாது, எல்லையை தாண்டி தாக்குதல் நடத்துவோம் என்ற செய்தியை அனுப்பினோம். இதுதான் இந்தியாவின் பலம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.