டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு
1 min read
Full curfew on weekends in Delhi
4/1/2021
டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊரடங்கு
டெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு விகிதம் 6 சதவீதத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் மீண்டும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது;-
டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது.
அத்தியாவசிய பணிகள் தவிர பிற அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.
பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்க பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப்
இந்த நிலையில் கொரோனா தாக்கம் பஞ்சாப் மாநிலத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது . மாநிலம் முழுவதும் ஜனவரி 15ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:-
அனைத்து முக்கிய நகரங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர பிற சேவைகளுக்கு அனுமதி கிடையாது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
‘முகக்கவசம் இல்லையெனில், சேவைகள் இல்லை’ என்ற வழிமுறை கடைபிடிக்கப்படும். அனைத்து சுகாதார துறை பணியாளர்களும் பணிக்கு வர வேண்டும்.
பார்கள், திரையரங்குகள், மால்கள், உணவகங்கள், ஸ்பாக்கள், ஏசி பேருந்துகள் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி இல்லை.
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பணியாளர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் அனுமதிக்கப்ப்டுவார்கள். தொழிற்சாலைகளிலும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.