இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 1,17,100 பேருக்கு கொரோனா; 302 பேர் சாவு
1 min read
Corona for 1,17,100 new people in a single day in India; 302 deaths
7/1/2022
இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வேகம் எடுக்கும் கொரோனா
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தபின்னர், கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. கடந்த 5 நாட்களாக தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.
கடந்த புதன்கிழமை 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. வியாழக்கிழமை அதிரடியாக உயர்ந்து, 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது.
இந்த நிலையில் நாட்டில் இன்று புதிதாக 1.17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 28 சதவீதம் அதிகமாகும், (இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 36,265 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,52,26,386 ஆக அதிகரித்துள்ளது.
302 பேர் சாவு
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 30,836 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,71,845 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு 3,71,363 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,49,66,81,156 பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,47,056 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,13,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 68,68,19,128 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.