முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
1 min read
First-Minister MK Stalin was vaccinated with a booster dose
11.1.2022
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பூஸ்டர்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பூஸ்டர் டோஸ் எனப்படும் 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பண்கள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக, முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9 லட்சத்து 84 ஆயிரத்து 676 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சுகாதார பணியாளர்கள் 5 லட்சத்து 19 ஆயிரத்து 604 பேரும், முன்கள பணியாளர்கள் 2 லட்சத்து 01 ஆயிரத்து 205 பேரும், 60 வயதுக்கு மேலானவர்கள் 2 லட்சத்து 63 ஆயிரத்து 867 பேரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!” என தெரிவித்துள்ளார்.