உத்தரபிரதேசத்தில் 3வது அமைச்சர் ராஜினாமா; சமாஜ்வாதி கட்சியில் சேர்கிறார்
1 min read
3rd minister resigns in Uttar Pradesh; Joins the Samajwadi Party
14.1.2022
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் வரிசையாக ராஜினாமா செய்துவருவதால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது 3வது அமைச்சர் தரம் சிங் சைனி ராஜினாமா செய்ததுடன், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷை சந்தித்துள்ளதால், அவர் சமாஜ்வாதியில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல்
உ.பி.,யில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ., சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே ஆளும் பா.ஜ.,வில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் மற்றும் 5 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் தற்போது பா.ஜ., அமைச்சர் தரம் சிங் சைனி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர், ஆயுஷ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளின் (தனிப் பொறுப்பு), அமைச்சராக இருந்தார். தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், வேலையில்லாத இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரை பா.ஜ., புறக்கணித்து வருவதால் தாம் பதவி விலகுவதாக தரம் சிங் சைனி தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தொடர்ந்து ராஜினாமா செய்யும் காட்சிகள் அரங்கேறுவதால் பா.ஜ.,வுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.