June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தோரணமலை. முருகன் கோவில் தைப்பூச திருவிழா, 18 ந் தேதி நடக்கிறது

1 min read

Thoranamalai Murugan Temple Thaipusam Festival is held on the 18th

15/1/2022

தென்காசி அருகே கடையத்தில் அகத்தியர், தேரையர் வாசம் செய்த தோரணமலை முருகன் கோவிலில் வருகிற 18ந் தேதி தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் திருக்கல்யாணம் நடைபெறும்.

தோரணமலை

தோரணமலை தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு மலை உச்சியில் கிழக்கு நோக்கிய குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்த முருகப்பெருமான் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதாகும். அகத்தியர் இங்குதான் காசிவர்மன் என்ற மன்னனுக்கு கபால அறுவை சிகிச்சை செய்தார். அவரது சீடர் தேரைவர் இங்கேயே தங்கி மருத்துவ சேவை செய்து வந்தார். அவர் இத்தலத்தில்தான் முக்தி அடைந்தார்.

இந்த மலையின் மேல்பகுதி ஒரு யானை படுத்திருப்பதுபோல் காட்சி தரும். யானைக்கு வாரணம் என்ற பெயர் உண்டு. இதனால் வாரணமலை என்று அழைத்தனர். இதுவே தோரணமலையானது.
இந்த மலையைச் சுற்றி 64 சுனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் சில சுனைகள் மட்டும் நாம் அறிய முடிகிறது. மூலிகை செடிகள் நிறைந்த மலை என்பதால் சுனை நீரும் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.

திருவிழாக்கள்

தோரணமலையில் தமிழ்மாதம் கடைசி வெள்ளி அன்று சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மலை உச்சியில் இருந்து சுனை நீரை பக்தர்கள் எடுத்துவந்து அபிஷேகம் நடைபெறும். பின்னர் விவசாயிகள் வாழ்வு முன்னேற சிறப்பு பூஜை நடைபெறும். கிருத்திகை அன்றும் மலைமேல் உள்ள முருகனுக்கும் சிறப்பு பூஜை நடைபெறும்.
மேலும் பவுர்ணமி அன்று காலையில் கிரிவலம் நடைபெறும்.

இங்கு தைப்பூசம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். பெண்கள் சீர்வரிசை கொண்டு வர கோலாகலமாக நடைபெறும்.
மேலும் தமிழ்புத்தாண்டு அன்றும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அன்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
வைகாசி விசாகம் அன்றும் விழா நடைபெறும்.

அன்னதானம்

தோரணமலையில் தினமும் மதியம் அன்னதானம் நடைபெறுகிறது. கடைசி வெள்ளி அன்று காலையிலும் மதியமும் அன்னதானம் நடைபெறுகிறது. தைப்பூசம் அன்று பகல் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது.
இந்த அன்னதானம் பக்தர்கள் கொடுத்த உபயம் மூலம் நடத்தப்படுகிறது. பக்தர்களிடம் இருந்து அரிசி, காய்கறிகள்தான் நன்கொடையாக பெறப்பட்டும் அன்னதானம் நடைக்கிறது. சில மாதங்கள் மிகவும் சிரத்தையின் பேரில்தான் நடந்தது. தற்போது இந்தப்பணி எந்தவித தொய்வும் இன்றி நடந்து வருகிறது.

ஆதிநாராயணன்

இந்த கோவில் இவ்வளவு வளர்ச்சி பெற காரணகர்த்தாவாக இருந்தவர் பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாரயாணன் அவர்கள்-. தலைமை ஆசிரியராக இருந்த அவர் பள்ளிக்கூடம் முடிந்ததும் தோரணமலைக்கு தன்னை அர்ப்பணித்து வேலை செய்தார். கோவிலுக்குச் செல்ல சாலை அமைக்க முயற்சி மேற்கொண்டார். குடிநீர் வசதி, சுனை சீரமைப்பு என பல பணிகள் நடந்தன. எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் தர்மராஜ் முயற்சியின் பேரில் மலை அடிவாரம் முதல் உச்சிவரை விசாலமான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கே. ஆதிநாராயணன் அவர்கள் மறைவுக்குப்பிறகு அவரது மூத்த மகன் செண்பகரானம் அறங்காவலர் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். இவர் பொறுப்பு ஏற்ற பின்னர்தான் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. இதற்காக அவர் பெரும்பாடுபட்டு வருகிறார். அதோடு இவர் சமூக பணிகளையும் கோவிலோடு இணைத்து மேற்கொண்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் தோரணமலை சார்பாக எழை மாணவர்கள் படிக்க உதவி செய்து வருகிறார். விவசாயம் செழிக்க மாதந்தோறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

தைப்பூசம்

தோரணமலையில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அன்று நடைபெறும் திருக்கல்யாணத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். பலர் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திகடன் செலுத்துவார்கள். மேலும் ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெறும். இரவில் வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெறும். காலை முதல் மாலை வரை விடாது அன்னதானம் நடைபெறும்.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 18ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 5.30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மகா ஸ்கந்த ஹோமம் நடைபெறுகிறது, திருசெந்தூரைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணன், எம்.கே.வீரபாகு நடத்துக்கிறார்கள். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது.
12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறும். அதன்பின் கொரோனா உள்பட தொற்று கிருமிகள் அழிந்து மக்கள் சுபிட்சமாக வாழ அகல் விளக்கு வழிபாட்டு பூஜை நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளையும் இணைய தளம் மூலம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கோவிலில் அன்னதானம் வழங்க முடியாது என்றாலும் கோவில் சார்பாக சுற்று கிராமங்களுக்கு உணவு பொட்டலம் விநியோகம் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ. செண்பகராமன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

குடமுழுக்கு

தோரணமலை கோவில் இதுவரை கும்பாபிஷேகத்தை கண்டதில்லை. எப்படியாவது குடமுழுக்கை நடத்திவிட அறங்காவலர் கே.ஏ. செண்பகராமன் ஆசைப்படுகிறார். இதற்கான மூலஸ்தானத்தை மாற்றாமல் கோவிலை விரிவுபடுத்த வரைபடமும் தாயரித்து வைத்துள்ளார். பக்தர்களின் உதவியால் எப்படியாவது நடத்த பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் பல நாட்கள் குடும்பத்தை மறந்து கோவில் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டு வருகிறார். அவரிடம் எந்த ஒரு வாகனமும் கிடையாது. கிடைக்கும் வண்டியில் (பஸ், ரயில்) அலைந்து திரிந்து , பக்தர்களை சந்தித்து இறை பணிக்காக தீவிர முயற்சி செய்து வருகிறார். அவரது குடும்பம் மட்டும் முயன்று இந்த மாபெரும் பணியை நடத்திவிட முடியாது. அதனால் பக்தர்கள் உதவியையும் ஆலோசனையையும் கேட்டு வருகிறார்.
இக்கோவில் வளர்ச்சிக்கு உதவியர்கள் அனைவரும் நல்ல வளத்தையும் நிம்மதியையும் கண்டதாக கூறுகிறார்கள். அன்னதானத்திற்கு உதவியவர்கள் சித்தர்களின் அருள் கிடைத்ததாக சொல்கிறார்கள். தற்போது திருப்பணிக்கும் பொருளாக உதவி முருகப்பெருமானின் அருளையும் சித்தர்களின் ஆசியையும் பெறலாம்.
தொடர்பு எண் 99657 62002.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.