தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
Excavation work at 7 sites in Tamil Nadu; Announcement by First-Minister MK Stalin
20.1.2022
தமிழகத்தில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடங்க இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பண்பாடு
தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும். அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையை புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னோக்கி எடுத்து சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
கீழடி
கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாக திகழ்கிறது. இதுவரை கங்கை சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்த “நகரமயமாக்கம்’’ தமிழகத்தில் இல்லையென்றும், பிராமி எழுத்து மவுரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன.
அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு. தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது.
சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 என கண்டறியப்பட்டுள்ளது.
“தண் பொருநை’’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதை கடந்த 8-9-2021 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
7 இடங்கள்
பண்டை தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022-ம் ஆண்டில் புதிதாக 7 இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.
அதாவது, சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்கள் (எட்டாம் கட்டம்). தூத்துக்குடி மாவட்டம் சிவகளை (மூன்றாம் கட்டம்). அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் (இரண்டாம் கட்டம்). கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை (இரண்டாம் கட்டம்).
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை (முதல் கட்டம்). திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி (முதல் கட்டம்). தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை (முதல் கட்டம்). மேலும், “திரைகடலோடியும் திரவியம் தேடல்’’ என்ற முதுமொழிக்கேற்ப, பண்டைய தமிழ் சமூகம் நாட்டின் பிறபகுதிகளோடும், வெளிநாடுகளுடனும் வணிக தொடர்பு கொண்டிருந்த சங்ககால துறைமுகங்களான பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகியவை முக்கிய பங்காற்றின.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தன்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோர முன்கள புலஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
முதற் கட்டமாக, சங்ககால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடலோரங்களில் ஆய்வினை மேற்கொள்ள இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி நிதியில் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் சங்க கால கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள புல ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு இந்த அகழாய்வுகளும், முன்கள புலஆய்வு பணிகளின் முடிவுகளும் உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.