கருத்தடைக்கு பின் பிறந்த குழந்தைக்கு ஆண்டுதோறும் ரூ.1.20 லட்சம் வழங்க ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
1 min read
1.20 lakh per annum for a child born after contraception
6.2.20202
கருத்தடை சிகிச்சைக்கு பின்னும் குழந்தை பெற்ற தாய்க்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அந்தக் குழந்தைக்கான படிப்பு செலவை அரசு ஏற்கவும், 21 வயது வரை, ஆண்டுதோறும் 1.20 லட்சம் ரூபாய் வழங்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்தடை
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தமிழ் நகரில் வசிப்பவர், தனம், இவரது கணவர் விக்னேஷ்குமார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அலட்சியம்இரண்டாவது குழந்தை பெற்ற பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில், 2014ல் தனம் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார்.’தைராய்டு’ பிரச்னைக்காக், அதே அரசு மருத்துவமனை சென்றபோது, டாக்டர் பரிசோதித்ததில், தனம் மீண்டும் கருவுற்றிருப்பது தெரிந்தது. 2017 செப்டம்பரில், மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றார்.
இதையடுத்து, அரசின் சலுகைகளை இழந்ததாகவும், குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, திருமணத்துக்கான செலவுகளை, தன்னால் செய்ய முடியாது என்பதாலும், டாக்டரின் அலட்சியத்தால் நடந்ததால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, உயர் நீதிமன்றத்தில் தனம் வழக்கு தொடர்ந்தார்.மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், விசாரணைக்கு வந்தது.
உத்தரவு
தனம் சார்பில், வழக்கறிஞர் எஸ்.பி.சுடலையாண்டி ஆஜராகி, ”கருத்தடை சிகிச்சை நல்ல முறையில் நடந்ததாகவும், இனிமேல் கருத்தரிப்பு இருக்காது எனவும், மனுதாரருக்கு உறுதி அளிக்கப்பட்டது. இருந்தும், கருத்தரிப்பு நடந்துள்ளது. ”மூன்று குழந்தைகள் ஆகி விட்டதால், அரசின் நல திட்டங்கள் கிடைக்காது,” என்றார்.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டாக்டர் தரப்பில் கவனக்குறைவு எதுவும் இல்லை. சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்றால், இழப்பீடு கோர மாட்டேன் என, மனுதாரர் உத்தரவாதம் அளித்துஉள்ளார்’ என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கருத்தடை சிகிச்சை செய்த டாக்டரின் கவனக்குறைவு தான் காரணம் என்ற, மனுதாரர் தரப்பு வாதத்தை புறக்கணித்து விட முடியாது. சிகிச்சையின் போது, மீண்டும் கருத்தரிப்பு இருக்காது என, மனுதாரரை நம்ப வைத்துள்ளனர்.
அடுத்ததாக குழந்தை வேண்டாம் என்ற நோக்கில் தான், மருத்துவமனையை மனுதாரர் அணுகி உள்ளார். அதனால், பலன் அளிக்கும் விதத்தில், சிகிச்சை நடப்பதை, டாக்டர் உறுதி செய்ய வேண்டும்.’சிகிச்சைக்கு பின்னும் கருவுற்று, குழந்தை பெற்றதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது ஏதோ தவறு நடந்துஉள்ளது; டாக்டர் கவனமாக இருக்கவில்லை’ எனவும், கருத முடியும். சிகிச்சை தோல்வி அடைந்ததற்காக, 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
டாக்டரின் கவனக்குறைவால் நேர்ந்த செயலுக்கு, 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டால் சரியாகி விடும் என்பதை, புரிந்து கொள்ள முடியவில்லை.மூன்றாவது குழந்தையைப் பொறுத்தவரை, வேண்டாத குழந்தை; சிகிச்சையின் போது ஏற்பட்ட கவனக்குறைவால், இந்த குழந்தை பிறந்து உள்ளது. இழப்பீடுபெற்றோருக்கு தேவையில்லாத குழந்தை என்றாகி விட்டால், அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கான செலவை, அரசு தான் ஏற்க வேண்டும். அது, அரசின் பொறுப்பாகி விடுகிறது.குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, டாக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முறையாக மேற்கொள்ளாமல், கவனக்குறைவான செயலால், முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம் பாதிக்கப்படும். முறையாக சிகிச்சை மேற்கொள்ளாததால், தேவையின்றி குழந்தை பெற்றுள்ளார். அதனால், இழப்பீடு பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது.ஏற்கனவே, இரண்டு பெண் குழந்தைகளுடன், ஏழ்மை நிலையில் மனுதாரர் உள்ளார். பொருளாதார நிலை கருதி, அடுத்த குழந்தை வேண்டாம் என்பதால் தான், கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார்.
ரூ.1.20 லட்சம்
சிகிச்சை தோல்வி அடைந்ததால், மூன்றாவது குழந்தை பெற்றுள்ளார். அந்த குழந்தையின் வளர்ப்புக்கான செலவை ஏற்க வேண்டியது, அரசின் கடமை.எனவே, மனுதாரருக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஐந்து வயதை எட்டிய உடன், மூன்றாவது குழந்தையை, அரசு அல்லது தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும். அந்த குழந்தைக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி கட்டணம், புத்தகம், சீருடை உள்ளிட்ட செலவுகளை, அரசே ஏற்க வேண்டும்.பட்டப்படிப்பு முடிக்கும் வரை அல்லது 21 வயது நிரம்பும் வரை, ஆண்டுதோறும் 1.20 லட்சம் வழங்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கான அரசு திட்டப் பலன்களையும், மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.