தமிழகம் முழுவதும் ரூ.2,043 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு
1 min read
Recovery of temple lands worth Rs 2,043 crore across Tamil Nadu
16.2.2022
தமிழகம் முழுவதும் ரூ.2,043 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இதுவரை 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 540.39 ஏக்கர் நிலங்கள், 496.1748 கிரவுண்ட் சதுர அடி மனைகள், 20.1434 கிரவுண்ட் கட்டிடங்கள், 46.2077 கிரவுண்ட் திருக்குளக்கரைகள் மீட்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி ஆகும்.
கும்பகோணம் வெங்கடாஜலபதி கோவிலுக்கு சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டிருந்த 6.9 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன். திருவானைக்காவல் அரங்கநாதர் சுவாமி கோவிலுடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்கு சொந்தமான 55 செண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு தற்போது கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி மற்றும் நில அளவை கல் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.