சகவாசக் கேடு- ஓர் ஆய்வு /முத்துமணி
1 min read
Sagavasa kedu /Tamil Ilakiyam by Muthumani
9/2/2022
ஏலே! திருட்டுப் பயலே, உன் சகவாசமே வேண்டாம் ஆளை விடு…..
அது என்ன சகவாசம்? சகவாசம் என்பதன் பொருள் என்ன?.
சகா என்னும்சொல்லும் அதனைச் சார்ந்த சொல்தானா? அப்படியானால் சகவாசம், சகா என்னும் சொற்களின் பொருள்தான் என்ன?. இவை தமிழ்ச் சொற்கள்தானா?
முதற்கண் சக என்னும் வேரில் இருந்து இச்சொற்கள் பிறந்ததன என்பது அறிக. மேலும் இச்சொற்கள், தமிழ்ச் சொற்கள் அல்ல வடசொற்கள்தான் என்பதும் அறிக.. பேச்சுத்தமிழில், எழுத்துத்தமிழில் அன்றாடம் நாம் வழங்கிவரும் சக என்னும் இச்சொல், உடன், ஒரே, நெருக்கம், பழக்கம், உறவு என்னும் பொருள்பட வரும்.
எடுத்துக்காட்டுச் சொல்லாம்… அப்படியானால்தான் புரிந்து கொள்ள இயலும். சக+உதரன்…. சகோதரன்… உதரம் என்றால் வயிறு… சகோதரன் என்பது ஒரே வயிற்றில் பிறந்தவன் என்று பொருள்படும்… ஒரே வயிற்றில் பிறந்தவர். சக உதரத்தில் பிறந்தவர். அதாவது நான் பிறந்த அதே வயிற்றில் பிறந்தவன், என் சகோதரன். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த அனைவரும் சகோதரர். நானும் அவனும் சக வயிற்றில் பிறந்தோர். அதைத் தமிழில் நாம் உடன் பிறந்தவன் என்னும் சொல்லால் குறிக்கிறோம்… அதைப் போல்தான் சகோதரி என்பதும் புரியுமல்லவா?.
மேற்கண்ட சொற்களில் சக எனும் சொல் ஒரே என்னும் பொருளைத் தருகிறது அல்லவா? (ஒரே வயிறு) சகோதரன் சகோதரி என்பது தமிழ்ச் சொற்கள் அல்ல. வடசொற்கள் என்பதால், உடன்பிறப்பு ,உடன் பிறந்தவன், உடன் பிறந்தவள், கூடப் பிறந்தவன், கூடப் பிறந்தவள் என்ற சொற்கள் தோன்றின.
சிறுவயதில், விடுமுறையில் விளையாடச் செல்லுமிடத்திற்கு என் தம்பியையும் கூட்டிச் சென்றேன். என் நண்பன் ஒருவன் கேட்டான்,” யார் இந்தப் பையன்?” நான் சொன்னேன்,” என் தம்பி” உடனே ஒருவன் கேட்டான்,” கூடப்பிறந்த தம்பியா?”உடனே நான் சொன்னேன், “இல்லை இல்லை நான் பிறந்து நான்கு ஆண்டுகள் கழித்துதான். பிறந்தான் பிறந்தான் .”அனைவரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தோம். இரட்டைப் பிறவியாக இருந்தால் கூடவே பிறப்பர். தம்பி என்று சொன்னால் சித்தி மகன் பெரியப்பா மகன் என்று ஒன்று விட்ட உறவுமுறையாகக் கூட இருக்கலாம் என்பதற்காகத்தான் கூடப் பிறந்தவன் என்று கேட்கிறார்கள். நாம் பிறக்கும் போது நம்மோடு சேர்ந்து நம்மோடு கூடப் பிறக்கவில்லை என்றாலும், நம் தாயின் வயிற்றிலே அதாவது, ஒரே தாயின் வயிற்றில் பிறந்ததால் கூடப் பிறந்தவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
இன்று உடன்பிறப்புகள் என்ற சொல் அரசியல்வாதிகள் மத்தியில் மட்டும் அதிக பிரபலம். மேடையில் பேசும்போது யாராக இருந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய உடன்பிறப்பாக மாற்றிக் கொள்வது அரசியல்வாதிகளின் வாயில் வரும் பேச்சு.
“ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம் சண்டை செய்தாலும் நாம் சகோதரர் அன்றோ?”..
இந்தியத் தாயின் வயிற்றில் நாம் அனைவரும் பிறந்ததால் நாம் ஒருவருக்கொருவர் சகோதரர் ஆகிவிடுகிறோம் என்பதை இப்படி அழுத்தமாகச் சொன்னான் பாரதி.
இந்தியா என் தாய்நாடு இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர். சகோதர்… ஒரு வயிற்றுப் பிள்ளைகள்..
…
ஷகி… என்னும் வடசொல் உடனிருந்து மனையறம் நடத்தும் மனைவியைக் குறிக்கும்… அல்லது அன்புக்கு உரிமையான காதலியைக் குறிக்கும்…பிரியசகி என்னும் சொல் அன்புள்ள தோழி அன்புக்குரிய மனைவி அன்புள்ள அன்புக்குரிய காதலி என்னும் பொருள் குறிக்கும் வட சொல்லாகும்… அன்புள்ள தோழி என்றும் பொருள் கொள்ளலாம். என்னுடன் வாழும் அன்பான பெண்ணே, இப்படியும் பொருள் கொள்ளலாம்.
” உணவும் செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை” காதலியைப் பிரிந்து தலைவன் பாடியது இப்பாட்டு. இங்கு காதலியை அல்லது மனைவியை மட்டும் குறிப்பதாக அமைகிறது.
ஒரே கட்சியில் இருக்கும் நண்பரைப் பார்த்து, இவர் நம் சகக் கட்சித் தோழர் என்று சொல்வர், அக்கட்சியைச் சேர்ந்தோர்… திரைப்பட நடிகை , உடன் நடிக்கும் தன்னுடைய தோழியோடு பேசிக்கொண்டிருந்தார். பார்ப்பதற்கு இருவரும் ஒரே மாதிரி இருந்தனர் இவர் யார் உங்களுடைய சகோதரியா? என்று கேட்டபோது , இவள் சக நடிகை, என் தோழி என்று கூறுவார். அவளும் திரைப்படத்துறையில் நடித்துவரும் ஒரே நடிகை. ஒரே துறையில் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு பேருந்தில் அல்லது புகைவண்டியில் என்னோடு பயணம் செய்பவர் என் சக பயணி. என்னுடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றுபவர் சக பணியாளர். வரலாற்றில் ஒரே காலத்தில் வாழ்ந்தவர் சக காலத்தில் வாழ்ந்தவர் என்று அழைக்கப்படுவர். கம்பனும் ஔவையும் சக காலப் புலவர். பின்னர் இதையே சமகாலத்தவர் என்று குறிப்பிடுவதும் உண்டு.
நம்முடைய ஆண்டு என்பதால் சக ஆண்டு என்போம்.
நண்பரருக்குள் அல்லது உறவினர்க்குள் ஏதாவது கருத்து வேற்றுமை காரணமாக பெரிய அளவில் சண்டை வந்து விட்டால், இனி இவனுடன் உறவு வேண்டாம் என்று கருதி,உறவை முறித்துக் கொள்வதற்காக, "இனிமேல் உன் சகவாசமே எனக்கு வேண்டாம்.செத்தாலும் என் முகத்தைப் பார்க்க வராதே. இது வரை உன்னோடு சகவாசம் வைத்திருந்ததை நினைத்து மிகுந்த வேதனையாக இருக்கிறது." என்று வசனம் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
“என்னை மகளாக நினைத்து அன்பு செலுத்த வேண்டாம். மருமகள் என்று கூட நினைத்து மரியாதையாக நடத்த வேண்டாம். ஒரு சாதாரண சக மனுஷியாக நினைக்கத் தோன்றுகிறதா இந்த கிழவிக்கு?” என்று மாமியாரை நினைத்துத் தன் தோழியிடம்,வருத்தப்படும் மருமகளைப் பார்க்கிறோம்.
சகவாசம் என்பது சேர்ந்து இருக்கும் நட்பு...வாசம்..வாழ்க்கை, பழக்கம் நெருக்கம். ....நட்பு என்பது சேர்க்கைதானே.. வாசம் என்பது வாழ்வது உன்னோடு சேர்ந்து வாழும் வாழ்வு இனி வேண்டாம், உன்னோடு பழகி வாழும் வாழ்க்கை இனிமேல் வேண்டாம், உன்னுடைய நெருக்கமான நட்பு இனி தேவை இல்லை, என்பது கோபத்தில் சொல்லப்பட்ட தன் பொருள்.
சக ஆண்டு என்பது நம்முடைய சொந்த ஆண்டுக் கணக்கைக் குறிக்கும். சித்திரை, வைகாசி எனத் தொடங்கும் ஆண்டுக்கணக்கைச் சக ஆண்டு என்று சொல்வோம். சகாப்தம் என்னும் சொல்லை, சக+அப்தம் என்று பிரிக்கவேண்டும். சகாப்தம் என்பது சகாப்தம் ஆகிவிட்டது. அப்தம் என்னும் சொல்லுக்கு ஆண்டு(year ) வருஷம் என்பது பொருள். சஷ்டியப்தபூர்த்தி என்பது என்ன? சஷ்டி என்பது அறுபதையும், அப்தம் என்பது ஆண்டையும்,பூர்த்தி என்பது நிறைவடைந்து என்பதையும் குறித்து,..அறுபது வயது நிறைந்துவிட்டதைக் குறிக்கும். சகாப்தம் என்பது நம்முடைய ஆண்டு என்பதைக் குறிப்பது. ஆனால் இப்போது சகாப்தம் என்பதற்கு வேறு ஏதோ ஒரு பொருள் கூறப்படுகிறது. ஈடு இணையற்ற சாதனை புரிந்தவரைக் குறிப்பிடும்போது அவர் ஒரு சகாப்தம்( legend) என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர்.
நடைமுறைச் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது,சகா என்னும் சொல், நம்முடைய, நம்முடன், நம்மோடு என்பது போன்ற ஒரு நெருக்கத்தைக் குறிக்கும் சொல்லாகத் தென்படுகிறது அல்லவா?
எனவே சகா என்று சொன்னால் நண்பன் எனப் பொருள் தரும் என்று துணிவோடு சொல்லலாம்... அப்படியானால் சகா என்னும் சொல் உடன் இருப்பவன் நெருங்கிப் பழகியவன், அதாவது நண்பன் எனப் பொருள்படுகிறது, அவ்வளவுதான்.. சகா என்பதன் பன்மைச் சொல் என்று வழக்கில் நாம் சகாக்கள் என்பதைப் பயன்படுத்தி வருகிறோம்.. சகாக்கள் என்றால் நண்பர்கள் என்பது பொருள் ஆகிறது..
அவன் நல்லவன்தான் இப்படி கெட்டுப்போவதற்கு காரணம் அவனுடைய கெட்ட சகவாசம். இப்படிக் குறைபட்டுக் கொள்வார்கள், ஒழுங்கீனம் உள்ள மகனைப் பார்த்த பெற்றோர். என்னுடைய மகன் நல்லவன் அவனைக் கெடுப்பது அவனுடைய நண்பர்கள் என்பது அவர்கள் கூற்றிலுள்ள நியாயம். கெட்ட சகவாசம் என்பது ஆகாத நட்பைக் அதாவது கூடா நட்பைக் குறிக்கிறது.
எல்லாம் சகவாச தோஷம்.. இப்படிக் கூறுவோமே.. இவன் ரொம்ப நல்லவன்தான். வாயில் கெட்ட வார்த்தை பேசாதவன். பழக்கவழக்கம் சரியில்லாத காரணத்தால் அது போன்று பேசும் மனிதர்களோடு நட்பு கொண்ட காரணத்தால் இப்போது இவன் வாயிலும் அது போன்ற வார்த்தைகள் சரளமாக வந்துபோகின்றன. எல்லாம் சகவாச தோஷம்....
கெட்ட சகவாசம் வைப்பவன் உருப்பட்டதாகச் சரித்திரம் இல்லை. பன்றியோடு சேர்ந்த கன்றும்..... தின்னும். உன் கெட்ட சகவாசம், உன்னைச் சும்மா விடாது என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்வர்.. சகவாசம் என்பதற்கு 'உடனுறைதல்' என்பது மிகச் சரியான தமிழ்ச் சொல்லாகும்.
‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்புடன் உடனுறைந் தற்று’
என்பது வள்ளுவர் வாக்கு. உட்பகை என்னும் அதிகாரத்தில் இவ்வாறு வள்ளுவர் கூறுகிறார். மன ஒருமை, மன உடன்பாடு, மனதால் ஒத்தகருத்து இல்லாதவர் சேர்ந்து வாழ்வது, ஒரு குடத்திற்குள் நச்சுப்பாம்புடன் ஒன்றாக (உடனுறைதல்) வாழ்வதைப் போன்றது.
கௌரவர் சகுனியின் சகவாசத்தால் அழிந்து போயினர். பாண்டவர் கிருஷ்ணனின் சகவாசத்தால் வெற்றியும் புகழும் பெற்றனர்.
-தமிழ் முத்துமணி.