June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ரவுடிகளை ஒழிக்க தனி்ச் சட்டம் கொண்டு வரப்படும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min read

A separate law will be introduced to eradicate rowdies – MK Stalin’s speech

12.3.2022
ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது என்றும், ரவுடிகளை ஒழிக்க தனி்ச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வன அலுவலர்கள் மாநாட்டின் 3-ம் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சாதி மோதல்கள்

சாதி மோதல்களை சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள்; அது சமூக ஒழுங்குப் பிரச்னை. இதில் ஈடுபடும் இளைஞர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்து, வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலமாக நடக்கும் வன்மங்களுக்கு எந்தெந்த வகையில் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

நடவடிக்கை

சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு பதிவிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அவர்களை சாதி, மதம், அரசியல் என அடையாளபடுத்தக்கூடாது.

ரவுடிகள்

ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது; ரவுடிகளை இடம், சாதி, மதம் என அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சொன்னார், இது போன்ற அடையாளப்படுத்தல்கள் கூடாது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்; குற்றங்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதோடு, திட்டமிட்டு உருவாக்கப்படும் மத மோதல்களை தடுக்க வேண்டும். சாதி மோதலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும்

மராட்டிய மாநிலம் போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும். மத மோத தடுப்பு பிரிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும்; குற்றம் புரிவோருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது.

கைதிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தும் யோசனையை செயல்படுத்தலாம்.குற்றம் அதிகம் நடப்பதாக நினைக்க வேண்டாம். இப்போது தான் புகார்கள் அதிகமாக வருகின்றன.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்..

முன்னதாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய தொடக்க உரை வருமாறு:-

மாநில முன்னேற்றத்திற்கு நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதேபோல், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் உங்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கும் என நான் உளமார நம்புகிறேன்.

இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போலவே கருதுகிறது. இன்று புவி வெப்பமாகுதல் நாட்டு அளவில் அல்ல, உலக அளவில் அதிகமாகப் பேசப்படுகிறது. அதற்காக இலக்குகள் நிர்ணயிக்கப்படுகிறது. வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமைச் சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

என்னைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, சுற்றுச்சூழலை மனதில் வைத்துக்கொண்டு அப்போதே நாங்கள் மரக்கன்றுகள் எல்லாம் நட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதை மனதில் வைத்துக்கொண்டு தான், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என்கின்ற பெயரை இதற்காகச் சூட்டினோம்.

மஞ்சப்பை

அத்துடன் நிற்காமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்தோம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நேர்மையான, வெளிப்படையான அனுமதி முறைக்கு வித்திட்டிருக்கிறோம்.

இப்போது முதல் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவரோடு சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டையும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு சுற்றுச்சூழல் தாக்கம்

மதிப்பீடு வரைவு அறிக்கை 2020 குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஆகவே, தொழில், சுற்றுச்சூழல் இரண்டும் சமுதாயத்தினுடைய சம நண்பர்கள் என்ற அளவிலே முன்னெடுத்துச் செல்லத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, தொழில் துவங்க அனுமதிக்கப்படும் அனுமதிகளை இன்னும் விரைவுபடுத்தும் ஆலோசனைகளை நீங்களெல்லாம் இங்கே வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்பதை மட்டும் என்னுடைய தொடக்க உரையாக சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.