ஓ.பன்னீர் செல்வம் மூலம்- சசிகலா மகிழ்ச்சி
1 min read
சசிகலா
O. Panneer Selvam- Sasikala Happiness
23.3.2022
ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்குத் தெரிந்த உண்மை ஓ.பன்னீர் செல்வம் மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது என்று சசிகலா கூறியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களாக ஆஜரானார். இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளதாகவும், செயலலிதா மரணத்தில் சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
கடவுளுக்கு தெரிந்த உண்மை
எது உண்மையோ அதை மாற்றவோ, திரையிட்டு மறைக்கவோ முடியாது. மக்களுக்கு உண்மை தெரியவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டபோது நானும் வரவேற்றேன். விசாரணை ஆணையம் மூலமே உண்மை பொதுமக்களுக்கு தெரியவரும்.
ஜெயலலிதா மரணத்தில் கடவுளுக்கு தெரிந்த உண்மை ஓ.பன்னீர் செல்வம் மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது.
என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருப்பதாக உண்மையைதான் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக தரப்பிடமிருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வராதது குறித்து எந்த வருத்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.