துபாய் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்-முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
1 min read
Rs 1,600 crore investment deal at Dubai conference-Signature in the presence of Chief Minister MK Stalin
26/3/2022
துபாய் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் முதலீடுகளை ஈர்க்க அவர் துபாய் பயணம் மேற்கொண்டார்.
துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடந்து வருகிறது. அங்கு இடம் பெற்றுள்ள இந்திய அரங்கு வளாகத்தில் தமிழ்நாட்டு அரங்கமும் உருவாக்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அந்த அரங்கை திறந்து வைத்தார். அந்த அரங்கில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா, மருத்துவம், கலைப்பண்பாடு ஆகிய துறைகளின் தொழில்பூங்காக்கள் பற்றிய தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் மந்திரிகளை சந்தித்து பேசி தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட துபாய் பொருளாதார மந்திரி அப்துல்லா பின் டூக் கூறுகையில், “மே மாதம் துபாய் வர்த்தக குழு டெல்லி, மும்பைக்கு வருகிறது. அப்போது தமிழக குழுவினர் எங்களை சந்திக்கலாம்” என்று தெரிவித்தார்.
2-வது நாள் நிகழ்ச்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாயில் 2-வது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று துபாயில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு தொழில் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
ரூ.1600 கோடி
இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னலையில் 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உலகின் அழகான நகரமான துபாய் நகரம் வணிகத்திலும் சிறந்து விளங்குவதாகவும், ஏற்றுமதியின் பெரிய நுழைவு வாயிலாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
“தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய ஏராளமான வாயப்புகள் உள்ளன. உலகளவில் பொருளாதார மேம்பாட்டு மையமாக தமிழ்நாட்டை மேம்படுத்துவதே எங்களின் குறிக்கோள். தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் உள்கட்டமைப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாடு- துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றும் மு.க.முதல்வர் ஸ்டாலின் பேசினார்.