நிலத்தை வளப்படுத்தும் ஊட்டச்சத்து கரைசல்; மாணவிகள் செயல்விளக்கம்
1 min read
Soil enrichment nutrient solution; Students Demonstration
26.3.2022
நிலத்தை வளப்படுத்தும் ஊட்டச்சத்து கரைசல் தயாரிப்பது எப்படி என்பது பற்றி விவசாயிகளுக்க மாணவிகள் செயல்விளக்கம் காட்டினார்கள்.
வேளாண் மாணவிகள்
வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த விவசாய குறிப்புகளை கிராம விவசாயிகளுக்கு செயல்விளக்க செய்து காட்டுவார்கள். அதன்படி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோவை வேளாண் ௧ல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமங்களுக்கு சென்று கள ஆய்வு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் மாணவிகள் பா.சாருமதி, ஜெ.துர்காதேவி, ப.கீதாலட்சுமி ,ஜோதி யாகன்டி, கு.கீர்த்தனா பிரியா, ரா.மின்னுஷா, ரா.முத்துச்செல்வி, செ.நந்தினி, மா.பிரியதர்ஷினி, அ.சிநேகா மற்றும் ஷ.ஸ்ரீநிதி ஆகிய 11 பேர் கொண்ட குழுவினர் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் அன்னூரில் தற்போது தங்கி உள்ளனர்.
ஊட்டச்சத்து கரைசல்
இவர்கள் அல்லப்பாளையம் கிராமத்தில் சஞ்சீவக் என்னும் ஊட்டச்சத்து கரைசலை செய்துகாட்டினர்.
சஞ்சீவக் என்பது ஒரு கரிம ஊட்டச்சத்து ஆகும். இது நுண்ணுயிரிகளால் மண்ணை வளப்படுத்தவும், விரைவாக எச்சம் சிதைவு செய்யவும் பயன்படுகிறது.
இந்த கரைசல் தயாரிக்க
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 300 லிட்டர்,
வெல்லம் – 500 கிராம்,
மாட்டு சிறுநீர் (கௌமுத்ரா) 100 லிட்டர்,
பசுவின் சாணம் 100 முதல் 200 கிலோ.
தயாரிக்கும் முறை
500 லிட்டர் கொள்ளவு கொண்ட டிரம்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 300 லிட்டர் தண்ணீரை நிரப்ப வேண்டும். அதனுள் 100 முதல் 200 கிலோ வரையிலான மாட்டுச் சாணம், 100 லிட்டர் மாட்டு சிறுநீர், 500 கிராம் வெல்லம் ஆகியவற்றை போட்டு கலக்கவும். அவற்றை மூடி
நொதித்தல் ஆக 10 நாட்களுக்கு அப்படியே வைக்கவும்.
அதன்பின் அதை எடுத்து பயன்படுத்தலாம். அந்த சஞ்சீவக் கரைசலை 20 மடங்கு தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு லிட்டர் கரைசலுக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்க்கலாம்.
இதனை 3 முறை பயன்படுத்தப்பட வேண்டும்.
விதைப்பதற்கு முன் நிலத்தில் தெளிக்க வேண்டும்.
விதைத்த 20 நாட்களுக்குப் பிறகும் 45 நாட்களுக்குப் பிறகு தெளிக்க வேண்டும்.
இதன் மூலம் நிலம் செம்மைபடும். அதாவது நிலம் ஊட்டச்சத்து நிறைந்ததாக மாறி செடிகள் நல்ல மகசூலை கொடுக்கும். மேலும் இது இயற்கை விவசாயத்திற்கு மிகவும் உகந்தது.
மேற்கண்ட செயல் விளக்கத்தை கிராம விவசாயிகளுக்கு செய்து காட்டினார்கள். விவசாயிகளும் மாணவிகளை பாராட்டினர்.