எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பற்றி எரிவது ஏன்?
1 min readWhy do electric bikes catch fire?
30.3.2022
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பலரும் எலக்ட்ரிக் பைக்குகள் பக்கம் திரும்பியுள்ளனர். பேட்டரியில் இயங்கும் இந்த இ-பைக்குகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் சில கி.மீ தூரமே சென்றாலும், தற்போதைய சூழலில் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். மத்திய அரசும் சுற்றுச்சூழலுக்கு மாசுப்பாட்டினை கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இ-பைக்குகள் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் இ-ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரியும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளது. கடந்த வாரம் மராட்டிய மாநிலம் புனேவில் ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி வைரலானது. சாலையில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரில் இருந்து முதலில் புகை வந்துள்ளது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.
அதேபோல், தமிழகத்தில் வேலூரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக இரவு சார்ஜ் ஏற்றியபோது, பேட்டரி அதிகளவு வெப்பமடைந்து வெடித்து சிதறியது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையும், மகளும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். சென்னை மாதவரத்தில் கல்லூரி மாணவர் இ-பைக்கை ஓட்டி வந்தபோது இஞ்சினில் திடீரென புகை வந்துள்ளது. நிறுத்தி பார்க்கையில் பேட்டரியில் இருந்து தீப்பிடித்து பைக் முழுதும் பரவியது. அதேபோல், திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பேட்டரி பைக் தீப்பிடித்து எரிந்துள்ளது.
வாங்க தயக்கம்
இப்படி எலக்ட்ரிக் வாகனங்களில் அடிக்கடி தீப்பற்றி எரியும் நிகழ்வுகளால், அதனை வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணமாக, அதிக நேரம் சார்ஜ் செய்வதால் பேட்டரி சூடு ஆவதாகவும், பேட்டரியை முறையாக பராமரிக்காமல் இருந்தாலும் இதுபோன்ற விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. பேட்டரி வாகனங்கள் வாங்குபவர்கள் அதனை சரியாக பராமரித்து வர வேண்டும் எனவும், குறிப்பிட்ட நேரம் மட்டும் சார்ஜ் போட்டுவிட்டு அணைத்துவிட வேண்டும் என்றும் மெக்கானிக்குகள் சிலர் அறிவுறுத்துகின்றனர்.