திருப்பதி கோவிலுக்கு ரூ.20 கோடி நிலத்தை தானமாக வழங்கிய வெளிநாட்டு பக்தர்
1 min read
A foreign devotee donated Rs 20 crore worth of land to the Tirupati temple
11.4.2022
திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நிலம் மற்றும் பொருட்களை தானமாக வழங்குவார்கள். வெளிநாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருப்பதியில் நேற்றுமுன்தினம் நடந்தது.
அப்போது அங்கு வந்த ஷீ செல்ஸ் நாட்டை சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் ரூ.20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கினார். ஷீ செல்ஸ் நாட்டில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார்.
அப்போது செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது:-
ஷீ செல்ஸ் நாட்டில் கோவில் கட்டுவதற்கு தேவையான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் கோவில் கட்டுவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு கூடி முடிவு செய்யும். இதேபோல் அவர் தானமாக வழங்கியுள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி கோவிலுக்கு வெளிநாட்டு பக்தர் ஒருவர் நிலத்தை தானமாக வழங்கியது இதுவே முதல் முறையாகும்.