உலகிற்கு நாளை முதல் உணவு பொருட்கள் விநியோகம் செய்ய தயார்; மோடி அறிவிப்பு
1 min read
Ready to deliver food items to the world from tomorrow; Modi announcement
12.4.2022
உலக வர்த்தக அமைப்பு அனுமதியளித்தால் உலக நாடுகளுக்கு நாளை முதல் உணவு பொருட்கள் விநியோகம் செய்ய தயார் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 48-வது நாளாக சண்டை நீடித்தது. இந்த போர் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், உணவு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.
இதற்கிடையில், இந்திய பிரதமர் மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் விவகாரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், குஜராத்தில் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-
உணவுப் பொருள்
இன்றைய உலகம் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையை சந்தித்து வருகிறது. யாரும் அவரவர் விரும்பியதை பெறுவதில்லை.
அனைத்து வழிகளும் மூடப்படுவதால் பெட்ரோல், எண்ணெய், உரங்களை கொள்முதல் செய்வது கடினமடைகிறது. ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது முதல் அனைவரும் தங்களிடம் உள்ள பொருட்களை பாதுகாத்து வைக்க நினைக்கின்றனர்.
உலகம் தற்போது புதிய பிரச்சினையை சந்த்துள்ளது. உலகின் உணவு கையிருப்பு தீர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபருடன் (ஜோ பைடன்) நான் பேசியபோது அவரும் இந்த பிரச்சனை குறித்து பேசினார்.
உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தால் நாளை முதல் உலகிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய இந்தியா தயார் என நான் அவரிடம் கூறினேன்.
நமது மக்களுக்கு உணவு வழங்க ஏற்கனவே நம்மிடம் போதிய உணவு உள்ளது. ஆனால், நமது விவசாயிகள் உலகிற்கு உணவு வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், உலக சட்டவிதிகளை நாம் பின்பற்ற வேண்டும். உலக நாடுகளுக்கு உணவு விநியோகம் செய்ய இந்தியாவுக்கு உலக வர்த்தக அமைப்பு எப்போது அனுமதியளிக்கும் என எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.