சென்னையில் மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
1 min read
Electric train loses control in Chennai
24.4.2022
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
தடம்புரண்டது
சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம் செல்வோர், மாணவ மாணவிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புறநகர் ரெயிலில் பயணித்து வருகின்றனர். இதனால், புற நகர் ரெயில் நிலையம் எப்போது பரபரப்புடன் காணப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் கூட்டம் வார நாட்களை விட சற்று குறைவாக இருக்கும்.
இந்த நிலையில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில் பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது.
காயம்
இந்த விபத்தில் ரெயிலின் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார். நல்ல வேளையாக ரெயிலில் யாரும் இல்லாததால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி, ரெயில் ஓட்டுநர் பிரேக் பிடிக்காததே ரெயில் விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். ஓட்டுநர் பத்திரமாக இருக்கிறார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. அதனால் ஒரு பெரிய விபத்து ஒன்றும் இல்லை.
இருந்தாலும், ஓட்டுநரின் கவனக்குறைவினால் பிரேக் பிடிக்காததால், ரெயில் நடைமேடையில் ஏறி சுவரில் மோதி நின்றுள்ளது என்று அவர் கூறினார்.