June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பரிகாரம் செய்வதாக பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை

1 min read

Priest jailed for raping Plus-1 student

24.4.2022

பரிகாரம் செய்வதாக கூறி பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அவரது தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

பிளஸ்-1 தேர்தல்

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ்-1 படித்து வந்தார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்தார்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமநாதபுரம் வந்து பூக்கட்டும் வேலையும், கொத்தனார் வேலையும் பார்த்து வந்தார். இவரது தாயும் பூக்கட்டும் வேலை செய்தார்.

தந்தையின் பாலியல் சீண்டல்

இந்தநிலையில் சிறுமியிடம் அவரது தந்தை பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் சிறுமி மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு சரியாக சாப்பிடாமலும் படிக்காமலும் இருந்துள்ளார். இதனால் அவரது தாய், டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னரும் சரியாகவில்லை.

இதனால் ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை கொட்டகை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 48) என்ற பூசாரியிடம் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பார்த்ததும் சிவக்குமார், “நோய் முற்றிய நிலையில் அழைத்து வந்துள்ளீர்கள். இதற்கு பரிகாரம் செய்து சரிசெய்ய ரூ.30 ஆயிரம் செலவாகும்” என்று கூறியதுடன், பரிகார பூஜை செய்ய சுடுகாட்டின் அருகில் உள்ள கூரை கொட்டகைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு குடிக்க பால் கொடுத்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அதனை குடித்ததும் சில நிமிடங்களில் மயங்கிய சிறுமியை பூசாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் சிறுமி முன்பைவிட மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டார்.
பாலியல் ரீதியாக தனக்கு நேர்ந்த கொடுமையை சைல்டு லைன் அமைப்பிற்கு அந்த சிறுமி தெரிவித்துள்ளார். அவர்களின் விசாரணையை தொடர்ந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் பூசாரி சிவக்குமாரை கைது செய்தனர்.

தந்தைக்கு சிறை

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.சுபத்ரா, சிறுமியின் தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதித்தார்.

சாகும்வரை சிறை

மேலும், பூசாரி சிவக்குமாருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் அரசு நிவாரணம் வழங்க நீதிபதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.

பூசாரியால் சிறுமி கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது நடந்த 6 மாதம் முடிவதற்குள் இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு, பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.