பத்ம பூஷன் விருது கிடைக்கும் என்றதால் பிரியங்கா காந்திக்கு ரூ.2 கோடி கொடுத்தேன் என்று யெஸ் வங்கி முன்னாள் தலைவர் வாக்குமூலம்
1 min read
Former Yes Bank chairman confesses to giving Rs 2 crore to Priyanka Gandhi for Padma Bhushan award
24.4.2022
பத்ம பூஷன் விருது கிடைக்கும் என்றதால் பிரியங்கா காந்திக்கு ரூ.2 கோடி கொடுத்தேன் என்று யெஸ் வங்கி முன்னாள் தலைவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
யெஸ் வங்கி தலைவர்
பணமோசடி வழக்கில் மார்ச் 2020 இல் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் நிறுவனரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராணா கபூர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் பணமோசடி வழக்கில் யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (டி.ஹச்.எப்.எல்) விளம்பரதாரர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் மற்றும் சிலருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய பணமோசடி தடுப்பு முகமை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையின் படி, அதில் யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர் தெரிவித்திருப்பதாவது:-
ரூ.2 கோடிக்கு ஓவியம்
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேராவிடமிருந்து எம்.எப்.உசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி, அப்போதைய பெட்ரோலிய துறை மந்திரி முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன்.
நான் அப்படி செய்தால், எனக்கு பத்ம பூஷன் விருது பெற அது உதவும் என்று கூறப்பட்டதால் அதனை நம்பி நான் பணம் கொடுத்தேன்.
ஆனால், முரளி தியோரா அவருக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக, எம்.எப் உசேன் ஓவியத்திற்கான காசோலையாக நான் செலுத்திய ரூ.2 கோடி, நியூயார்க்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது.
இது ஒரு கட்டாய விற்பனை என்று நான் கூற விரும்புகிறேன். இதற்கு நான் ஒருபோதும் தயாராக இல்லை. என்னால் இயன்றவரை, முரளி தியோராவின் போன் அழைப்புகள் மற்றும் அவருடனான தனிப்பட்ட சந்திப்புகளை புறக்கணித்தேன். அதன் மூலம், இந்த ஒப்பந்தத்தைத் தவிர்க்க நான் பலமுறை முயற்சித்தேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.