June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாடு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை -பிரதமர் மோடி கேள்வி

1 min read

Tamil Nadu does not reduce VAT on petrol and diesel: PM Modi

27.4.2022
தமிழ்நாடு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என்று பிரதமர் மோடி கேள்வி விடுத்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதல்-மந்திரிகளுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

எரிபொருள் மீதான வரியை 2021 நவம்பர் மாதமே மத்திய அரசு குறைத்து விட்டது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும். வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை. மத்திய அரசுக்கு செவி கொடுக்காத மாநில மக்கள் தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மராட்டியம், தெலுங்கானா, மேற்குவங்கம், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் சில காரணங்களால் அதை கேட்கவில்லை.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.111க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல் – டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும்.

வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும்.பொருளாதார முடிவுகளில் மத்திய, மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பு மிக அவசியம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது:-
கொரோனா சவால்

கொரோனா சவால் இன்னும் முறியடிக்கப்படவில்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா நெருக்கடியை சிறப்பாக நிர்வகித்தாலும், இப்போது மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரிப்பதைக் காணலாம். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெயிலுக்கு மத்தியில் அதிகரித்து வரும் தீ விபத்துகளைத் தடுக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை அதிகரிக்கவேண்டும்.

தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசியை விரைவாக வழங்குவது நமது முன்னுரிமை அதே நேரத்தில் பொது இடங்களில் கொரோனா நடமுறை கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பஞ்சாப், சட்டீஸ்கர், திரிபுரா மற்றும் பிற மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.