தஞ்சை தேர் திருவிழா விபத்து: மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு-நேரில் அஞ்சலி
1 min read
Tanjore Chariot Festival Accident: MK Stalin Relief Announcement-Live Tribute
27.4.2022
தஞ்சை தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தேர் திபத்து
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் திருத்தேர் வந்தபோது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் தேர் திருவிழா விபத்து நடந்த தஞ்சை களிமேடு கிராமத்துக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நிவாரணம்
மேலும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்த துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
சட்டசபையில் அஞ்சலி
தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.