28 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் சென்ற யோகி ஆதித்யநாத்; தாயிடம் ஆசி பெற்றார்
1 min read
Yogi Adityanath, who returned to his hometown after 28 years; The mother was blessed
4.5.2022
உத்தரபிரதேச முதல்மந்திரி ஆன பிறகு யோகி ஆதித்யநாத், தனது தாய் மற்றும் உறவினர்கள் யாரையும் சந்தித்து பேசாமலேயே இருந்தார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் சென்ற யோகி ஆதித்யநாத், தாயை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.
ஆதித்யநாத்
உத்தரபிரதேச மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பூர்வீக கிராமம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.
பூர்வீக கிராமத்தில் இருந்து வெளியேறிய யோகி ஆதித்யநாத் தீவிர அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் சொந்த ஊருக்கு சென்றதே இல்லை. உத்தரபிரதேசத்தில் அவர் தங்கிவிட்டார்.
யோகி ஆதித்யநாத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இன்னமும் அந்த கிராமத்திலேயே உள்ளனர். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தின் மருமகனுக்கு இன்று (புதன்கிழமை) குலதெய்வ கோவிலில் மொட்டை போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு…
இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு யோகி ஆதித்யநாத்துக்கு அவரது தாய் மற்றும் உறவினர்கள் அழைப்பு விடுத்தனர். அதை ஏற்று யோகி ஆதித்யநாத், உத்தரகாண்டில் உள்ள தனது பூர்வீக கிராமத்துக்கு சென்றார். 28 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது சொந்த ஊருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச முதல்மந்திரி ஆன பிறகு யோகி ஆதித்யநாத், தனது தாய் மற்றும் உறவினர்கள் யாரையும் சந்தித்து பேசாமலேயே இருந்தார். நேற்று முதன் முதலாக அவர் தனது தாய் சாவித்திரி தேவியை சந்தித்தார். அப்போது தாயின் காலில் விழுந்து யோகி ஆதித்யநாத் ஆசி பெற்றார்.
யோகி ஆதித்யநாத்தின் தலையில் கைவைத்து அவரது தாய் வாழ்த்து தெரிவித்தார். இந்த படத்தை முதல்மத்திரி யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.