நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்- ரஜினிகாந்த் நடத்தி வைத்தார்
1 min read
Actress Nayanthara – Vignesh Sivan’s wedding was a riot – Rajini conducted
9.6.2022
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று (9.6.2022) மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இந்து முறைப்படி கோலாகலமாக நடந்தது. திருமணத்தை நடிகர் ரஜினிகாந்த் நடத்தி வைத்தார்.
நயன்தாரா காதல்
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார் நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு இடையே நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 7 வருடங்களாக இவர்கள் தீவிரமாக காதலித்து வந்தனர்.
லிவிங் டு கெதர் முறை–யில் சென்னை எழும்பூரிலுள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரிப்பது, வினியோகிப்பது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி முடிவு செய்தது. ஆனால், அங்கு அதிகமான விருந்தினர்கள் பங்கேற்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மகாபலிபுரத்தில் ரிசார்ட்டில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை மகாபலிபுரத்தில் வடநெம்மேலி பகுதியிலுள்ள ஷெரட்டன் ரிசார்ட்டில் நயன்தாரா திருமணத்துக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கண்ணாடி மாளிகை போன்ற அரங்குக்குள் இன்று (வியாழன்) காலை நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இந்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.
நயன்தாரா பட்டுப்புடவை அணிந்திருந்தார். விக்னேஷ் சிவன் பட்டு சட்டை, வேட்டி அணிந்திருந்தார்.
திருமண விழாவில் ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, மலையாள நடிகர் திலீப், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன், அட்லீ, மற்றும் கிருத்திகா உதயநிதி, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவில் விஐபிக்கள் தவிர, நயன்தாரா, விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
மீடியாவினர் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்துக்கு வந்த விருந்தினர்களிடமிருந்து செல்போன்கள் வாங்கிக் கொண்டனர். அதன் பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த திருமண விழாவுடன் நயன்தாரா பற்றிய ஆவணப் படமும் உருவாக்கப்பட்டு, ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. இதற்கான ஒளிபரப்பு உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
1 லட்சம் பேருக்கு விருந்து
நயன்தாரா திருமணததையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகலில் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. அதன்படி ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உளளிட்ட முக்கிய கோயில்களில் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.