திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பெயரில் சமூக வலைதளத்தில் பணம் கேட்டு மோசடி
1 min read
Fraud by asking for money on a social networking site in the name of the Tiruvallur District Collector
12.6.2022
போலி வலைதள கணக்கு மூலம் மாவட்ட கலெக்டரின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
போலி சமூக வலைதளம்
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக மாவட்ட கலெக்டர்களின் பெயரில் போலி சமூக வலைதள கணக்குகள் தொடங்கி, அதன் மூலம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவை பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அரங்கேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெயரில் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலம் அரசு அதிகாரிகளிடம் பணம் கேட்டு மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இதை யாரும் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.
ஏற்கனவே புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு, திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், விழுப்புரம் கலெக்டர் மோகன், திருப்பூர் கலெக்டர் வினீத் ஆகியோர் பெயர்களை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.