நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் 2-வது நாளாக விசாரணை
1 min read
National Herald case: 2nd day trial for Rahul
14.6.2022
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
மோசடி புகார்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள “யங் இந்தியா” நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 2-ந் தேதி ராகுலும், 8-ந் தேதி சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. வெளிநாட்டில் இருப்பதால் விசாரணை தேதியை மாற்றுமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சோனியாவும் சம்மன் தேதியை மாற்றி வைக்க கோரினார்.
ஆஜர்
இதனையேற்ற அமலாக்கத்துறை ராகுல் காந்தி திங்கட்கிழமையும் (13-ந் தேதி) சோனியா காந்தி ஜூன் 23-ந் தேதியும் ஆஜராகுமாறு புதிய சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் கட்சியினருடன் ராகுல்காந்தி பேரணியாக சென்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை 11.10 மணிக்கு ஆஜரானார். ராகுல்காந்தி அலுவலகத்தில் ஆஜரானதும் முதல் 20 நிமிடம் வருகை பதிவு மற்றும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர். மதியம் 2.30 மணிக்கு மதிய உணவுக்கான அவர் புறப்பட்டார். மாலை 3.30 மணிக்கு ஆஜரான ராகுல்காந்தியிடம் இரவு 11.25 மணி வரை விசாரணை மேற்கொள்ளப் பட்டது. சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் சுற்று விசாரணையின்போது பண மோசடி தடுப்பு சட்டம் (பி.எம்.எல்.ஏ.) பிரிவு 50-ன் கீழ் தனது வாக்குமூலத்தை ராகுல்காந்தி சமர்பித்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டம்
முன்னதாக ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவையும் மீறி பேரணியாக சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். டெல்லி உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் மறுநாளும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.
2-வது நாளாக…
இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜாரானார். அவரிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலை 11 மணி அளவில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்காவும் வந்தார். ராகுல் காந்தியிடம் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
ராகுல் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் இன்றும் பேரணியாக செல்ல முயன்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். கே.சி.வேணுகோபால், ஆதர்ரஞ்சன் சவுத்ரி, சவுரவ் கோகாய், திபேந்தர் சிங் ஹீடா, ரஞ்சித் ரஞ்சன், மாணிக்கம் தாகூர், இம்ரான் உள்ளிட்ட தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.